தமிழ் இஸ்லாம் இணைய தளம்

இளம் பிறை அனாதைகள் அறக்கட்டளை

இந்த வாரப் புதிய கட்டுரைகள்

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் :

இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: -

 

“மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)

 

உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்தது: -

 

‘சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் இறைவழியில் செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி

 

வழிப்போக்கனைப் போல இவ்வுலகில் வாழ வேண்டும்: -

 

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். (ஆதாரம் : புகாரி)

 

முதியவரின் இளமை: -

 

“முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

 

மனிதர்களோடு வளரும் ஆசைகள்: -

 

“மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை. 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி

 

நரகம் தடை செய்யப்படக் காரணமான வார்த்தை: -

 

இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன். “(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது ‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை”‘ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஹ்மூத் இப்னு ரபீஉ (ரலி), ஆதாரம் : புகாரி

 

பொறுமைக்குப் பிரதிபலன் சொர்க்கம்: -

 

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் கூறினான்:

இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்”. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

 

மறுமையை மறக்கடிக்கும் உலகத்தின் செல்வம்: -

 

‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி), ஆதாரம் : புகாரி

 

செல்வத்துக்கு அடிமையானவன் துர்பாக்கியவான் ஆவான்: -

 

“பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

“ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி

 

நம்முடைய செல்வம் எது?

 

“(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் ‘உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?’ என்று கேட்டார்கள். தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்’ என்று பதிலளித்தார்கள். ‘அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி

 

மறுமையில் நற்பலன் குன்றியவர்கள்: -

 

‘(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி வழங்கி அச்செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி).

 

போதுமென்ற மனமே உண்மையான செல்வமாகும்: -

 

“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

 

தொடர்ந்து செய்யப்படும் நற்செயலே அல்லாஹ்வுக்கு விருப்பமானது!

 

‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள். . அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி

 

நன்றியுள்ள அடியாரின் செயல்: -

 

நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு அல்லது புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள். அறிவிப்பவர்: முஃகீரா இப்னு ஷ{அபா(ரலி), ஆதாரம் : புகாரி

 

விசாலமான அருட்கொடை எது?

 

அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்)
அவர்கள் ‘என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சம்ப்பவருக்கு அல்லாஹ் மேலும் சம்ப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி), ஆதாரம் : புகாரி

 

விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்பவர்கள்!

 

 

“என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

 

சொர்க்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டவர்கள்!

 

“தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத(hன நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத(hன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) , ஆதாரம் : புகாரி

 

அண்டை வீட்டாருக்கு தொல்லை தராதே!

 

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி) , ஆதாரம் : புகாரி

 

விருந்தினரைக் கண்ணியப்படுத்துங்கள்!

 

நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை என் காதுகள் செவியேற்றன்; என் உள்ளம் அதை மனனமிட்டது. விருந்துபசாரம் மூன்று நாள்களாகும். (அவற்றில்) ‘அவரின் கொடையும் அடங்கும் அப்போது அவரின் கொடை என்ன?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(அவரின் கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பு) ஆகும்’ என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். மேலும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்’ என்றார்கள். அறிவிப்பவர்:அபூ ஷ{ரைஹ் அல்அதவீ அல்குஸாஈ(ரலி), ஆதாரம் : புகாரி

 

பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் பேசினால்?

 

“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

 

“ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

 

மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் யாருக்கு கிடைக்கும்?

 

“(தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு போருக்கு அல்லாஹ் தன்னுடைய (அரியாசத்தின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்.). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

 

இறையச்சத்தால் குறைவாக சிரி! நிறைய அழு!

 

 

“நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

 

சொர்க்கம், நரகம்!

 

“மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

 

செல்வத்தில் கீழானவர்களை நினைத்துப்பார்: -

 

“செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

 

நன்மையான காரியத்தை செய்ய நினைத்தாலே நன்மை எழுதப்படுகின்றது: -

 

“(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி

 

சொர்க்க வாசியா அல்லது நரகவாசியா என தீர்மானிப்பது எது?

 

“(கைபர் போரின் போது) நபி(ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக் கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்’) என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்து கொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக் கொண்டு இருந்தார். இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து) கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.

அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் நற்செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன’ என்றார்கள்” அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி), ஆதாரம் : புகாரி

 

அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்: -

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘தாய் தந்தையருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். (நான் தொடர்ந்து) ‘பிறகு எது?’ என்றேன். அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுதல்’ என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள். அறிவிப்பவர் :வலீத் இப்னு அய்ஸார் (ரஹ்), ஆதாரம் : புகாரி.

தாயின் மகிமை: -

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

தம் தாய் தந்தையர் ஏசப்பட தாமே காரணம்?

‘ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)’ என்றார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) , ஆதாரம் : புகாரி.

அல்லாஹ் தடை செய்ததும் வெறுப்பதும்!

“அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி), ஆதாரம் : புகாரி.

பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்கள்: -

(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்றேன். அறிவிப்பவர் :அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி), ஆதாரம் : புகாரி.

இணைவைக்கும் பெற்றோரையும் ஆதரிக்க வேண்டும்: -

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள். ‘எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, ‘மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்’ எனும் (திருக்குர்ஆன் 60:8 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) கூறினார். அறிவிப்பவர் :அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி), ஆதாரம் : புகாரி.

உறவை முறிப்பவன் சுவனம் புகமாட்டான்: -

“உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி), ஆதாரம் : புகாரி.

வாழ்வாதாரம் பெருக வேண்டுமா? ஆயுள் நீட்டிக்கபபட வேண்டுமா?

“தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

உறவை முறித்தால்?

உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்’ (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்: -

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

அல்லாஹ் அடியார்கள் மீது வைத்துள்ள அன்பு: -

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது ‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!’ என்றார்கள். நாங்கள், ‘இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது’ என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர் :உமர் இப்னு கத்தாப் (ரலி), ஆதாரம் : புகாரி.

பாவங்களிலேயே மிகப் பெரியது எது?

நான், ‘இறைத்தூதர் அவர்களே! பாவங்களிலேயே மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். ‘உன்னைப் படைத்த, இறைவனுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்’ என்று பதிலளித்தார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீயே கொலை செய்வது’ என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்றேன். ‘உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவது’ என்றார்கள். நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ‘அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!

‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். அறிவிப்பவர் :ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம் : புகாரி.

கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுபவரின் உன்னத நிலை!

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர் ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஸஃப்வான் இப்னு சுலைம் (ரஹ்), ஆதாரம் : புகாரி.

கருணை காட்டாதவர் கருணை காட்டப்படமாட்டார்: -

(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாரைப் பேணுவதின் முக்கியத்துவம்: -

“அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாரை துண்புறுத்துபவன் இறை நம்பிக்கையாளரேயல்ல!

‘அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :அபூ ஷுரைஹ் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாரின் அன்பளிப்பை அற்பமாக கருதாதே!

‘முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இருவரில் யாருடைய வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி.

நல்லதைப் பேசு! அல்லது வாய் மூடி இரு!

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

 

மத்ஹபையாவது பின்பற்றுவார்களா?

 

 P.J

 

அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்களே! உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என உங்களுக்குப் போதிக்கிறார்களோ அந்த மத்ஹப் நூல்களில் உள்ள ஏராளாமான விசயங்களை உங்களுக்கு அவர்கள் சுட்டிக் காட்டாமல் மறைத்துள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் செய்திகள் மிகத் தெளிவான சான்றுகளாகும்.

 

 

உங்கள் மத்ஹப் நூற்களிலேயே பித்அத், தடுக்கப்பட வேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத் தான் உங்களோடு சேர்ந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல! மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

 

 

தராவீஹ் 20 ரக்அத்கள் என்பது பலவீனமான செய்தியாகும்

 

 

தராவீஹ் இருபது ரக்அத்கள் தான் தொழவேண்டும், எட்டு ரக்அத்களுக்கு ஆதாரங்கள் இல்லை, இதைச் செய்பவர்கள் புதுமைவாதிகள், குழப்பவாதிகள் என்று கூறி வரும் மத்ஹபுவாதிகள் பின்வரும் செய்தியைப் படித்து, தெளிவு பெறட்டும்.

 

 

நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் வித்ருத் தொழுகை உட்பட பதினோரு ரக்அத்துகளை விட அதிகமாகத் தொழுததில்லை. இது புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே இப்னு ஹுசைமா, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாக இப்னு அபீ ஷைபா, தப்ரானி, பைஹகி போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ள, நபி (ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகை நீங்கலாக இருபது ரக்அத்துகள் தொழுதார்கள் என்ற செய்தி பலவீனமானதாகும்.

 

 

(ஹனபி மத்ஹப் நூல்: ஹாஷியா தஹ்தாவி, பாகம்: 1 பக்கம்: 269)

 

 

தொழுகையில் நெஞ்சில் கைகட்டுதல்

 

 

தொழுகையில் நெஞ்சில் கை கட்டக் கூடாது, தொப்புளுக்குக் கீழ் அல்லது வயிற்றில் தான் கட்ட வேண்டும் என்று சொல்பவர்கள், மத்ஹப் நூல் என்ன சொல்கிறது என்பதை பார்க்கட்டும்.

 

 

இமாம் ஷாஃபி அவர்களிடத்தில் (தொழுகையில்) இரு கைகளை நெஞ்சின் மீது வைப்பது தான் சிறப்புக்குரியதாகும்.

 

 

நூல்: ஹிதாயாவின் விரிவுரை நூலான அல்இனாயா, பாகம்: 1, பக்கம்: 468

 

 

(இது ஹனஃபி மத்ஹப் நூலாகும்)

 

 

இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தொழக் கூடியவன் நெஞ்சில் கைவைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் நெஞ்சில் கைகளை வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என்று அறிவிக்கப்படும் ஹதீஸ் இதற்குரிய ஆதாரமாகும். ஏனென்றால் நெஞ்சின் மீது கை வைத்தல் என்பது (தொப்புளுக்குக் கீழ்) மறைவுறுப்பின் மீது கை வைப்பதை விட இது பணிவிற்கு மிகவும் நெருக்கமானதாகும்.

 

 

நூல்: கன்ஸுத்தகாயிக் என்ற நூலின் விரிவுரை நூலான தப்யீனுல் ஹகாயிக் பாகம்: 1 பக்கம்: 107 (இது ஹனஃபி மத்ஹப் நூலாகும்)

 

 

வாயில் மொழியும் நிய்யத் இல்லை

 

 

தொழும் போதும், நோன்பு நோற்கும் போதும் வாயால் சில வார்த்தைகளை கூறி நிய்யத் செய்ய வேண்டும் என்று நடைமுறைபடுத்தி வரும் மத்ஹப்வாதிகள் இச்செய்தியை படிக்கட்டும்.

 

 

பொதுவாக அனைத்து வணக்கங்களிலும் நிய்யத்தை வாயால் மொழிதல் என்பது பித்அத்தான காரியமாகும்.

 

 

ஹனபி மத்ஹப் நூல்: அல்பஹ்ருர் ராயிக், பாகம்: 2 பக்கம்: 346

 

 

"நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் நான் இவ்வாறு தொழகிறேன் என்று (நிய்யத்தை வாயால்) கூறுபவர்களாக இருந்தார்கள் என ஸஹீஹான, லயீஃபான எந்த ஹதீஸ்கள் வழியிலும் உறுதியாகவில்லை. மேலும் ஸஹாபாக்களிலும் தாபியீன்களிலும் ஒருவர் கூட இவ்வாறு செய்தார் என்றும் உறுதிப்படுத்தப்படவில்லை'' என்று சில சிறந்த ஹதீஸ் கலை வல்லுநர்கள் அறிவித்துள்ளதாக ஃபத்ஹுல் கதீர் என்ற நூலில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹில்யா என்ற நூலில் "நான்கு இமாம்களிடமிருந்தும் இவ்வாறு எடுத்துரைக்கப்படவில்லை என்றும், நபியவர்கள் தொழுகைக்காக நின்றால் அல்லாஹு அக்பர் என்று தான் கூறுவார்கள்'' என்ற விவரம் மேலதிகமாக இடம்பெற்றுள்ளது.

 

 

ஹனபி மத்ஹப் நூல்: ஹாஷியது இப்னி ஆபிதீன், பாகம்: 1 பக்கம்: 416

 

 

பராஅத் இரவு இல்லை

 

 

மார்க்கத்தில் இல்லாத காரியங்களை நன்மை தரும் காரியமாகச் செயல்படுத்தி வரும் மத்ஹப்வாதிகள் மத்ஹப் நூல்களில் இடம் பெற்றிருக்கும் இந்தக் கருத்துக்களுக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?

 

 

ரஜப் மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப், இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும், ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு ரக்அத்துகள் சிறப்பாகத் தொழுவதும் பழிக்கப்பட வேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதைச் செய்பவனைத் தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும்.

 

 

ஷாஃபி மத்ஹப் நூல்: இஆனா, பாகம்: 1 பக்கம்: 270

 

 

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும், ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும்

 

 

ஷாஃபி மத்ஹப் நூல்: ஃபத்ஹுல் முயீன், பாகம்: 1 பக்கம்: 270

 

 

பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும்.

 

 

ஹனபி மத்ஹப் நூல்: அல் பஹ்ருர் ராயிக், பாகம்: 5 பக்கம்: 232

  

    நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

 

 

அல்குர்ஆன் 47:33

 

 

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

 

 

அல்குர்ஆன் 33:36

 

 

திருக்குர்ஆன், மற்றும் நபி (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதல் ஆகிய இரண்டை மற்றும் பின்பற்றி வாழக்கூடியவன் தான் உண்மையான முஃமின் என்பதை மேற்கண்ட வசனங்கள் நமக்குப் போதிக்கின்றன. ஆனால் சத்தியத்தை மறந்து மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக்கிக் கொண்ட ஆம் பெருமக்களால் சமுதாயம் வழிகெடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மத்ஹபுகள் என்ற பெயராலும் தர்ஹா, தைக்காக்கள் என்ற பெயராலும் பல வகைகளில் வழிகெடுக்கின்றனர்.

 

 

ஓரிறைக் கொள்கைக்கு எதிரான தர்ஹா வழிபாடுகள் எல்லாம் உண்மையானதாகச் சித்தரிக்கப்பட்டு, இன்று இஸ்லாமிய சமுதாயம் நரகப் படுகுழிகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

 

 

யூத, நஸ்ரானிய அறிஞர்களைப் போன்று வயிற்றுப் பிழைப்புக்காக மார்க்கத்தைத் திரிக்கின்ற இந்த போ மவ்லவிகள், மக்களை குருட்டுக் கூட்டங்களாய் மாற்றி வருகின்றனர்.

 

 

ஆனால் இவர்கள் எந்த மத்ஹபுகளைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுகிறார்களோ அந்த மத்ஹபுகளில் இடம் பெற்ற ஒரு சில சத்தியக் கருத்துக்களைக் கூட பின்பற்ற முன்வருவதில்லை.

 

 

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாங்கள் கூறுகின்ற கருத்துக்களை நீங்கள் நம்பவில்லை என்றாலும் நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள மத்ஹபு நூல்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்களையாவது அறிந்து, இந்த வழிகெடுக்கும் மவ்லவிகளை விட்டும், இணை வைக்கக் கூடிய காரியங்களை விட்டும் தவிர்ந்து கொள்வீர்கள் என்ற நன்னோக்கத்தில் இக்கருத்தை உங்கள் முன்னர் வைக்கின்றோம்.

 

 

கப்ரை பூசுவதும், அதன் மீது கட்டிடம் எழுப்புவதும், அதன்மீது அமர்வதும், எழுதுவதும் வெறுப்பிற்குரியதாகும்.

 

 

(ஷாஃபி மத்ஹப் நூல்: அல்முஹத்தப் பாகம்: 1 பக்கம்: 138)

 

 

கப்ருகள் தரைக்கு மேல் ஒரு ஜான் அல்லது அது போன்ற அளவிற்கு உயர்த்தப்படுவதைத் தான் நான் விரும்புகிறேன். அது கட்டப்படாமல் இருப்பதையும் பூசப்படாமல் இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது (கட்டுவதும் பூசுவதும்) அலங்காரத்திற்கும் பெருமைக்கும் ஒப்பாக உள்ளது. மரணம் இதற்கு உரியதல்ல. முஹாஜிரீன்கள் மற்றும் அன்சாரி ஸஹாபாக்களின் கப்ருகள் பூசப்பட்டதாக நான் காணவில்லை. மக்கமா நகரில் அதிகாரிகள் அங்கு கட்டப்பட்ட கப்ருகளை இடித்ததைப் பார்த்தேன். இதை மார்க்க அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை. இவ்வாறு ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள்

(இமாம் ஷாஃபி அவர்கள் தொகுத்த நூல்: அல் உம்மு, பாகம்: 1 பக்கம்: 277)

 

 

கப்ரிருந்து வெளியேற்றப்பட்ட மண்ணை விட அதிகமான மண் (வைத்து கப்ரை மூடுவது) வெறுப்பிற்குரியதாகும். ஏனென்றால் கப்ரின் மீது மண்ணை அதிகரிப்பது அதனைக் கட்டுவதைப் போன்றதாகும்

 

 

(ஹனபி மத்ஹப் நூல்: அல் பஹ்ருர் ராயிக், பாகம்: 2 பக்கம்: 209)

 

 

கப்ரை முத்தமிடுவது நரகத்தில் சேர்க்கின்ற பித்அத்தாகும்!

 

 

கப்ரை முத்தமிடுவதும் கட்டியணைப்பதும் வெறுப்பிற்குரியதாகும். இறை நேசர்களின் ஜியாரத்திற்காகச் செல்லும் போது நிலைப்படிகளை முத்தமிடுவதும் வெறுப்பிற்குரியதாகும். இவை மக்கள் செய்து வருகின்ற பித்அத்தான காரியங்களாகும்

 

 

(ஷாஃபி மத்ஹப் நூல்: முக்னில் முஹ்தாஜ், பாகம்: 1 பக்கம்: 364 )

 

 

நபிமார்கள் மற்றும் அவ்யாக்களின் பொருட்டால் வஸீலா தேடுவது கூடாது!

 

 

ஒருவன் "இன்னாரின் பொருட்டால் அல்லது உன்னுடைய நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களின் பொருட்டால்'' என்று தன்னுடைய துஆவில் கூறுவது வெறுப்பிற்குரியதாகும். ஏனென்றால் படைத்தவனிடத்தில் படைக்கப்பட்ட பொருளுக்கு எந்த அதிகாரமும் இல்லை

 

 

(ஹனஃபி மத்ஹப் நூல்: ஹிதாயா, பாகம்: 4 பக்கம்: 459)

 

 

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்பக்கூடியவன் காஃபிராவான்!

 

 

நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் காஃபிராகி விடுவான்.

 

 

(ஹனஃபி மத்ஹப் நூல்: அல் பஹ்ருர் ராயிக், பாகம்: 3 பக்கம்: 94)

 

 

இறந்தவர்கள் எதையும் கேட்க மாட்டார்கள்!

 

 

மரணித்தவர் பேசுவதை செவியேற்பதைப் பற்றிய ஆய்வு: பேசுவதின் நோக்கமே (மற்றவர்) விளங்கிக் கொள்வதற்காகத் தான். மரணம் என்பது இதற்கு அப்பாற்பட்டதாகும்.

 

 

(நூல்: ரத்துல் முஹ்தார், பாகம்: 3 பக்கம்: 836.)

 

 

(பத்ருப்போரில் கிணற்றில் வீசப்பட்டவர் செவியேற்றார்கள் என்பதை) ஆயிஷா (ர) அவர்கள் "உம்மால் கப்ருகளில் உள்ளவர்களை செவியேற்கச் செய்ய முடியாது'' (35:22) மற்றும் "உம்மால் இறந்தவர்களைச் செவியேற்கும்படி செய்ய முடியாது'' (27:80) ஆகிய வசனங்களைக் காட்டி மறுத்துள்ளார்கள்.

 

 

(நூல்: ரத்துல் முஹ்தார் பாகம்: 3 பக்கம்: 836)

 

 

இறந்தவர் பெயரில் ஃபாத்திஹா ஓதி பார்சல் செய்ய முடியாது!

 

"ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' (53:39) இந்த வசனத்திருந்து ஷாஃபி (ரஹ்) அவர்களும் அவரைப் பின்பற்றியவர்களும் பின்வருமாறு சட்டம் எடுக்கிறார்கள்: "குர்ஆன் ஓதி அதன் நன்மையை இறந்தவர்களுக்குச் சேர்த்து வைப்பது அவர்களை அடையாது. ஏனென்றால் இது (இறந்தவர்களாகிய) அவர்கள் செய்த செயல் அல்ல. இன்னும் அவர்களுடைய சம்பாத்தியமும் அல்ல. இதன் காரணமாகத் தான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சமுதாயத்தை முன்னோக்கி (அதைச்) செய்யுமாறு தூண்டவும் இல்லை. நேரடியாகவோ அல்லது (மறைமுகமான) சுட்டிக் காட்டுதன் மூலமோ நபி (ஸல்) அவர்கள் இதற்கு வழிகாட்டவில்லை. நபித்தோழர்களில் எந்த ஒருவரும் கூட இவ்வாறு செய்ததாக (எந்த செய்தியும்) பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு செய்வது நன்மையானதாக இருந்தால் இதில் அவர்கள் நம்மை முந்தியிருப்பார்கள்.

 

 

(நூல்: தப்ஸீர் இப்னு கஸீர் 53:39 வசனத்தின் விரிவுரை)

 

 

ஜும்ஆவிற்கு ஒரு பாங்கு தான்

 

 

ஸாயிப் பின் யஸீத் (ர) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலும், அபூபக்ர் (ர), மற்றும் உமர் (ர) அவர்களுடைய காலத்திலும் இமாம் மிம்பரில் அமரும்போது சொல்லப்படுகின்ற முதல் பாங்கு தான் ஜும்ஆவிற்குரிய பாங்காக இருந்தது. உஸ்மானுடைய ஆட்சிக் காலம் ஏற்பட்ட போது, மக்கள் அதிகமானார்கள். எனவே உஸ்மான் இரண்டாவது அறிவிப்பை செய்யுமாறு கட்டளையிட்டார்கள். எனவே அது அறிவிக்கப்பட்டது. இவ்வாறே அக்காரியம் நிலைபெற்று விட்டது.

 

 

ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதாவு என்ற அறிஞர் உஸ்மான் (ர) அவர்கள் தான் இதனைப் புதிதாக உருவாக்கினார் என்பதை மறுத்து, முஆவியா (ர) அவர்கள் தான் இதனைப் புதிதாக உருவாக்கினார் என்று கூறியுள்ளார். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

 

 

மேலும் ஷாஃபி (ரஹ்) கூறுகிறார்கள்: எது எப்படி இருந்தாலும் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் இருந்த (ஒரு பாங்கு கூறும்) முறை தான் எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியதாகும்.

 

 

(ஷாஃபி இமாம் அவர்களின் அல்உம்மு' என்ற நூல், பாகம்: 1 பக்கம்: 195)

  இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின்

 இறுதிப் பேருரை

  இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.


    அதுதான் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

    இறைத்தூதர் முஹம்மது அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல் ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து "மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது "கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, "பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள். அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

    நபி அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே "நபியவர்களின் இறுதிப் பேருரை" என்பதாக இன்று அறியப்படுகிறது.

    கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)

    தொடக்க துதி மொழிகள்
    நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' ஸுனன் இப்னு மாஜா 1892,1893)

    பிரிவின் முன்னறிவிப்பு
    ஒ... மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

    பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
    மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

    தலமைக்குக் கீழ்ப்படிவீர்!
    ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

        பிறர் உடமையைப் பேணுவீர்!
    ஒ... மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.

    அராஜகம் செய்யாதீர்கள்!
    அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)

    உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

    பணியாளர்களைப் பேணுவீர்!
    ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம்  மாஜித் அலீ கான்)

    மறுமைக்கு அஞ்சுவீர்!
    ஓ... குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)

 அநீதம் அழிப்பீர்!
   
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.

    வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன். அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

    முறைதவறி நடக்காதீர்!
    அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789)

    உரிமைகளை மீறாதீர்!
    ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, "உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)

    ஒ... மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

    இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)

    பெண்களை மதிப்பீர்!
    கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!  (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

    இரண்டைப் பின்பற்றுவீர்!
    மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

    எச்சரிக்கையாக இருப்பீர்!
    மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

    இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)

    இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!
    (மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செயவதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)

    அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)

    சகோதரம் பேணுவீர்!
    ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, ஃபிக்ஹுஸ் ஸீரா 456)

    சொர்க்கம் செல்ல இதுதான் வழி!
    ஒ... மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

    குற்றவாளியே தண்டிக்கபடுவார்!
    ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)

    இஸ்லாம் முழுமையாகி விட்டது!
    ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)

    மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)

    இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)

    பிறகு நபி அவர்கள் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்'' என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ""இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!'' என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)

    இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

""இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3) (ஸஹீஹ்ுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)
 

  

 

A Beautiful Hadith


 Rasulullah (Sallalloho alaihe Wa-aalay wasallam) said:


 "When a man dies and his relatives are busy in funeral, there stands an extremely handsome  man by his head. When the dead  body is shrouded, that man gets in between the shroud and the chest of the deceased.


 When after the burial, the people return home, 2 angels, Munkar and Nakeer(names of two special Angels), come in the grave and try  to separate this handsome man so that they may be able to interrogate the dead man in privacy about his faith.

 

   But the handsome man says, "He is my companion, he is my friend. I will not leave him alone in any case.

   If you are appointed for interrogation, do your job. I cannot leave him until I get him admitted into Paradise".


 Thereafter he turns to his dead companion and says, "I am the Qura'an, which you used to read, sometimes in a loud voice and sometimes in a low voice. Do not worry. After the interrogation of Munkar and Naker, you will have no grief. 


 When the interrogation is over, the handsome man arranges for him from Al-Mala'ul A'laa (the angels in Heaven) a silk bedding  filled with musk.


 Rasulullah (Sallalloho alaihe Wa-aalay wasallam) said: "On the Day of Judgement, before Allah, no other intercessor will have a greater status than the Qura'an,neither a Prophet nor an angel."


> Please keep forwarding this "Hadith" to all ...

   because Rasulullah(Sallallo ho alaihe Wa-aalay wasallam) said:

   "Pass on knowledge from me even if it is only one verse". 
   May Allah bestow this favour on all of us.


>AMEEN AMEEN

Welcome

Newest Members

mohamed meeranAbu Saif 

Google+ Web Search